சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுவதால், அவர்களையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இரண்டு அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலை செய்தவர்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தலையீட்டினால், உரிய சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன்.

பொது மக்களின் இந்த ஒருங்கிணைந்த போராட்டம் இல்லாமல் போயிருக்குமானால், ‘செங்கல்லை விழுங்கிவிட்டுச் செறித்துவிட்டது’ என்று சொல்லி இருப்பார் முதலமைச்சர். இறுதியாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஶ்ரீதர், இரண்டு உதவி ஆய்வாளர்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரும், இரண்டு காவலர்களான முருகன், முத்துராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. புதிதாக முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் சிக்கிக் கொண்ட தமிழக அரசு ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது. இக்கொலைக்கு காரணமான அனைவரும் ஒருவர் விடாமல் கைது செய்ய வேண்டும்.

பென்னிக்சும் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணமடைந்த அடுத்த நாளே, தமிழக முதலமைச்சர் விடுத்த அறிக்கையில் குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்தார். பென்னிக்ஸ் மூச்சுத்திணறித்தான் இறந்தார் என்றும், ஜெயராஜ் உடல் நலமில்லாமல் இறந்தார் என்றும் அவராகவே தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழக அரசின் வழக்கறிஞர், இதனைப் பூசிமெழுகப் பிரயத்தனம் செய்தார். இது ‘லாக்அப் மரணமே அல்ல’ என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தன் பங்குக்கு மற்றொரு தீர்ப்பைச் சொன்னார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் நீதியரசர்கள் உத்தரவுப்படி விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, சாத்தான்குளம் போலீசார் மிரட்டினார்கள்; மாஜிஸ்திரேட்டை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்தார்கள். மாஜிஸ்திரேட் துணிச்சலாக இதுகுறித்து உயர்நீதிமன்றப் பதிவாளருக்குப் புகார் கொடுத்தார். இந்த ஆட்சியில் ஏதுமறியாத அப்பாவி மக்கள் மட்டுமல்ல, மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானது.

மேலும் வாசிக்க: சாத்தான்குளம் இரட்டைக் கொலை; 6 போலீசார் மீது கொலை வழக்கு, எஸ்ஐ ரகுகணேஷ் கைது

கடந்த நான்கு நாட்களாக ஊடகங்களில் ஏராளமான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. அநியாயத்தைத் தட்டிக் கேட்க, பொதுமக்களே ஆர்த்தெழுந்து, புலன் விசாரணையை மேற்கொண்டிருப்பதைப் போன்ற எண்ணம் பார்ப்பவர் மனதில் தோன்றியிருக்கிறது. இந்த நெருக்கடியான நிலையில் வேறு வழியில்லாமல் தான், இத்தகைய நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழக அரசு தள்ளப்பட்டது.

இத்தோடு கடமை முடிந்ததாகத் தமிழக அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது. இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வினையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகப் பெருமக்களும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள். யாரையும் காப்பாற்றத் தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது.

இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ‘பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை’ச் சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது; அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும்” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

இதனிடையே ஆர்எஸ்எஸ்.ஆல் 1989 ஆம் ஆண்டு சேவாபாரதி என்ற பெயரில் தொடங்கப்பட்ட ‘ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ அமைப்பு, சமீபகாலமாக தமிழகத்தில் குறிப்பாக லாக்டவுன் காலத்திலும் போலீஸார் காட்டிய கெடுபிடிகளை காட்டிலும், அந்த குழுவில் உள்ளவர்கள் செய்த அராஜகத்திற்கு அளவில்லை என்பது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் புகாராக தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/savenra/posts/4823691280990090