கணினி ஆசிரியர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதற்கான காரணம், மற்றும் மறு தேர்வு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ், ஆன்லைன் தேர்வில் சர்வர் கோளாறு ஏற்படுவது இயல்பு தான் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, கணினி ஆசிரியர் தேர்வில், சர்வர் கோளாறு காரணமாக தேர்வர்கள் ஆன்லைன் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால், தேர்வு எழுத வந்தவர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு, மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்தது.

கணனி தேர்வில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய தலைவர் வெங்கடேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ‘தமிழகத்தில் முதன் முறையாக கணினி வழியாக தேர்வு நடத்தப்பட்டது. தமிழகதத்தில் 27 மாவட்டம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 119 தேர்வு மையங்களில் கணினி ஆசிரியர் தேர்வு நடைபெற்றது. நிறைய இடங்களில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படவில்லை.

ஆனால், கே.எஸ்.ஆர் பொறியில் கல்லூரி, கொங்குநாடு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி, அன்னை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 3 தேர்வு மையங்களில் மட்டும் சர்வர் தொழில்நுட்ப கோளாறு தொடர்ச்சியா இருந்துள்ளது. இந்த கல்லூரிகளில் தேர்வு எழுத வந்த 1221 தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும்.

ஆன்லைன் தேர்வில் இது போன்ற கோளாறு ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இப்போது கூட எய்ம்ஸ் தேர்வு நடந்த போது தமிழகத்தில் மாதா பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த கல்லூரி தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. டி.ஆர்.பி தேர்விலும் இதே போல் ஒரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் 10.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கவில்லை. 11 மணி வரையில் முயற்சித்து பார்த்தும் கோளாறு சரி செய்ய முடியவில்லை. தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு தேர்வருக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக கம்ப்யூட்டர் வேலை செய்யவில்லை என்றால், அவருக்கு வேறொரு கம்ப்யூட்டர் மூலமாக தேர்வு நடத்தப்படும். எந்த கேள்வியில் இருந்து கோளாறு ஏற்பட்டதோ அதே கேள்வியில் இருந்து மீண்டும் ஆட்டோமெட்டிக்காக தொடங்கும். எனவே, இது போன்ற ஆன்லைன் தேர்வில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்து தேர்வர்கள் அச்சமடைய வேண்டாம்’ எனக் கூறினார்.

இந்நிலையில், ஜூன் 27ந் தேதி பாதிக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.