தமிழகத்தில் பல பிரச்னைகள், வழக்குகளை தாண்டி சர்க்கார் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக கேரளாவில் நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கார் படத்தில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது முதல் பிரச்னை தொடங்கி இன்றும் பிரச்னையிலேயே சென்று கொண்டிருக்கின்றது. மேலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழகத்தில் அதிமுகவினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மட்டும் தான் இந்தநிலை என்றால், கேரளாவில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலம் திருச்சூரில் சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சர்க்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்து சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் ‘சர்க்கார்’, ரூ 12 கோடியுடன் வசூல் நின்று விட்டதாகவும், அதை தொடர்ந்து பெரிதும் வசூல் வரவில்லை என மலையாள பாக்ஸ் ஆபிஸ் தளங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவில் வெளியான சர்க்கார் படம், இரண்டு மூன்று கோடி வரை விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்க்கார் படத்தின் வசூல், சென்னையிலும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.