நாடு முழுவதும் சரவெடியை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் கால நேரத்தை, காலை 4 மணி நேரமாகவும், மாலை 4 மணி நேரமாகவும் அதிகரித்து உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும், விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டுமென இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.

அதேபோல் பட்டாசுக்கு தடைகோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட மனுக்கள் இன்று (29.10.2021) நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, விதிமீறி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், பசுமை பட்டாசுகளே தயாரிக்கப்படுவதாக கூறிய உற்பத்தியாளர்கள் தரப்பு பட்டாசுக்கு தடை விதிக்கக்கூடாது என்று வாதிட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி, “பட்டாசு உற்பத்தியில் பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாக கூறினார். மேலும், வெடிப்பொருள்களில் குறிப்பாக சரவெடிகளையும், பேரியம் நைட்ரேட் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளையும் தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சரவெடிக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள உத்தரவை ஊடகங்கள், செய்தி இணையதளங்கள் வாயிலாக மாநில அரசுகள் விளம்பரம் படுத்தவேண்டும். பட்டாசு தொடர்பான இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட வேதி பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடித்தால் அந்தந்த மாநில காவல்துறை, அரசு அதிகாரிகளே பொறுப்பு.

அதேபோல் போலி பசுமை பட்டாசுகளை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதனால் பல மாநில அரசுகள் பட்டாசு வெடிப்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக காற்று மாசு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.