பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. 1,643,539 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 66,093 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 656 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அலுவலக பணிகளில் இருந்து விடுத்து கொண்டு தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

முன்னதாக கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றது தான், எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிவந்த போல்சனாரோ. தொடக்கத்திலிருந்தே முடக்க நிலைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்தார். சமூக முடக்கம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும் என்று வாதிட்டார்.

மேலும் மாஸ்க் அணிவதையும் தவித்து, பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் தோன்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய போல்சனாரோ, நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும் என்றார்.

மேலும் பிரேசிலில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, சமூக விலகல் அறிவுரைகளை கிடப்பில் போட்டுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் தலைநகர் பிரேசிலியாவில் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: கொரோனா வைரஸை அடுத்து சீனாவில் விஸ்வரூபம் எடுக்கும் பாக்டீரியா தொற்று…