சென்னை, அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் சங்கரன் (45). இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம். மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவி வைஷ்ணவி. மகள்கள் சஹானா, சாது.

சங்கரன் எம்.எஸ்.சி. வேளாண்மை படிப்பை முடித்துவிட்டு, ஐ.ஏ.எஸ்.-ஆக வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல்லில் இருந்து சென்னை வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய அவர் இரு முறை நேர் காணல் வரை சென்றார். 3-ஆவது முறை நிச்சயம் வெற்றி பெறலாம் என்று எண்ணி இருந்த அவருக்கு வயது வரம்பு தடையாக மாறியது.

தனது கனவு தகர்ந்தாலும், தன்னைப் போல வரும் இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகும் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய அவர் சென்னை அண்ணா நகரில் 2004-ஆம் ஆண்டு 34 மாணவர்களுடன் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியைத் தொடங்கினார். இப்போது 1,500 பேர் பயிற்சி பெறுகின்றனர். 900-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர். தமிழ்நாட்டில் இருந்து பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசு அதிகாரிகளை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் சங்கரின் அகாடமிக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

சங்கரன் வியாழக்கிழமை வழக்கம் போல அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்துக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவருக்கும், அவரது மனைவி வைஷ்ணவிக்கும் இடையே குடும்பப் பிரச்னை காரணமாகத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது அறைக்கு சென்று கதவை உள் பக்கமாக தாளிட்டுக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை அனுப்பினர். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரது உடல் அகாடமிக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பிறகு சங்கரன் உடல் இறுதிச் சடங்குக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் அவரது உடல் அங்கிருந்து நல்லகவுண்டம்பாளையம் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.சங்கரின் உடலுக்கு அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் நான் ஜெயித்திருந்தால், நான் மட்டும்தான் ஐ.ஏ.எஸ்., ஆகியிருப்பேன். தோற்றதினால் இன்று பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்-களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறேன்” என்று எப்போதும் பெருமைபட சொல்லும் சங்கரின் உடலுக்கு அவரது பயிற்சி மையத்தில் பயின்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளை வகித்து வரும் 100க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஏராளமான இளைஞர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சங்கரின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவரது உடலுக்கு தகன மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சங்கரின் உடலுக்கு அவரது தாயார் தெய்வானை எரியூட்டினார்.சங்கரன் மனைவி வைஷ்ணவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் கதறி அழுதது அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.