கொரோனா தடுப்பூசிக்கான கோ-வின் செயலி விரைவில் வெளியாகும், ஆனால் அதற்குள் அதே பெயரில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஜிட்டல் தளங்களில் கோ-வின் என்ற பெயரில் தற்போது சில போலியான கோவிட்-19 தடுப்பூசி செயலிகள் வெளியாகியுள்ளன. இவற்றை பதிவிறக்கம் செய்யவோ அதில் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்யவோ வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோ-வின் என்ற பெயரில் அரசு ஒரு செயலியை உருவாக்கி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரபூர்வ தளமாக கோ-வின் வெளியாகும்போது போதுமான அளவில் தொடக்கத்தில் விளம்பரப்படுத்தப்படும். அப்போது அனைத்து ஆப் ஸ்டோர்களில் அது கிடைக்கும்.

ஆனால் கோ-வின் என்ற அதேபெயரில் தற்பாது டிஜிட்டல் தளங்களில் ஒரு செயலி வெளியாகியுள்ளது. கோ-வின் என்ற சில செயலிகள் ஆப் ஸ்டோர்களில் உள்ளன. போலியான இவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். இதில் தனிப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்யவோ இதனை பகிரவோ வேண்டாம்.

அரசு வெளியிட உள்ள கோ-வின் ”Co-WIN” (கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க்) செயலி என்பது கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை நிகழ்நேர கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமாகும். இது கிட்டத்தட்ட அதன் இறுதி கட்ட செயல்பாட்டில் உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அல்லது எந்தவொரு செயலி ஸ்டோர்களிலும் அரசின் கோ-வின் செயலி தற்போது நேரலையில் செல்லவில்லை.

தற்போது மத்திய அரசு உருவாக்கிவரும் கோ-வின் மென்பொருள் செயலி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவிட்-19 வைரஸ் தடுப்பூசி வழங்கப்படுவதற்கான முதல் முன்னுரிமையாக சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களின் தரவுகளை சேகரித்து பதிவேற்றி வருகிறது.

கோ-வின் டிஜிட்டல் தளம் இலவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய மொபைல் செயலியை உள்ளடக்கியது, இது தடுப்பூசி தரவுகளை பதிவு செய்ய உதவும். தடுப்பூசி பெற விரும்பும் எவர் ஒருவரும் தங்கள் பெயரை அதில் பதிவு செய்யலாம்.

கோ-வின் செயலியில் ஐந்து தொகுதிகள் இருக்கும். நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளி ஒப்புதல் தொகுதி மற்றும் அறிக்கை தொகுதி ஆகியவை ஆகும்.

தடுப்பூசி பெறுவதற்காக தங்கள் பெயர்களை மக்கள் பதிவு செய்துகொள்ளும் தொகுதி ஆகும். இது உள்ளூர் அதிகாரிகள் அல்லது சர்வேயர்களால் வழங்கப்பட்ட இணை நோயுற்ற தன்மை குறித்த மொத்த தரவைப் பதிவேற்றும்.

தடுப்பூசி தொகுதி என்பது பயனாளியின் விவரங்களை சரிபார்த்து தடுப்பூசி நிலையை புதுப்பிக்கும். பயனாளி ஒப்புதல் தொகுதி என்பது பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும். ஒருவர் நோய்த்தடுப்புக்கு ஆளான பிறகு கியூஆர் அடிப்படையிலான சான்றிதழ்களையும் இது உருவாக்கும் .

அறிக்கை தொகுதி என்பது எத்தனை தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டன, எத்தனை பேர் கலந்து கொண்டனர், எத்தனை பேர் வெளியேறிவிட்டார்கள் போன்ற அறிக்கைகளை தயாரிக்கும். இந்த செயலி குளிர்-சேமிப்பகங்களின் வெப்பநிலையின் நிகழ்நேர தரவையும் பிரதான சேவையகத்திற்கு அனுப்பும்” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காற்றில் பறந்த மத்திய அமைச்சர் வாக்குறுதி.. தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு