கோவையில் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பிசிஆர் சோதனை நடத்த வேண்டும். முழு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துய்மைப் பணியாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தங்கள் உயிரை பணையம் வைத்து பணியாற்றுபவர்களில் முக்கியமானவர்கள் தூய்மைப் பணியாளர்கள். விளிம்பு நிலையில் இருக்கும் இப்பணியாளர்களின் முக்கியத்துவம் சமீப நாள்களில் பொது சமூகத்துக்கு புரியத் தொடங்கி, தமிழக அமைச்சர்கள் உட்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செய்யும் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றன.

சமூகத்தில் கொரோனாவால் நடைபெற்ற மிகப் பெரிய நேர்மறையான மாற்றமாக பார்க்கப்பட்டாலும், சில நாள்களிலேயே அவை மறக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் இன்று 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் உள்ள 100 வார்டுகளில் 3000க்கும் அதிகமான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, அரசு அறிவித்த சலுகைகள், நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லை என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தும் அவை தீர்க்கப்படாததால் கோவையில் உள்ள மாநகராட்சியின் மண்டல, பகுதி அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்கள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை கிடு கிடு உயர்வு- வாகன ஓட்டிகள் அதிருப்தி

இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆதித் தமிழர் பேரவை தூய்மைப் பணியாளர்கள் சங்கம், “தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பிசிஆர் எனப்படும் கொரோனா கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். முழு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

50 லட்சம் மதிப்புள்ள மருத்துவ காப்பீட்டை மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்களுக்கு வழங்கியது போல் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்” ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தனி மனித இடைவெளிவிட்டு பதாகைகளை கையிலேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.