வந்தே பாரத் திட்டத்தின்கீழ் துபாயில் இருந்து இந்தியர்களை அழைத்துவந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, கனமழை மற்றும் வானிலை பாதிப்பு காரணமாக, ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 19 பேர் உயிழந்துள்ளனர். பயணம் செய்த 191 நபர்களில் 123 பேர் காயமடைந்திருப்பதாகவும், 20 நபர்கள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போயிங் – 737 என்ற வகையைச் சேர்ந்த அந்த விமானம் 191 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களை ஏற்றி வந்தது. அதில் 10 குழந்தைகளும் அடக்கம். இந்த விமானத்தை ஓட்டிவந்தவர் விங் கமாண்டர் தீபக் வசந்த் சாத்தே (வயது 59). அவர் இந்திய விமானப்படையில் போர் விமானியாக 22 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இந்த விபத்து குறித்து உயிர்பிழைத்தவர்கள் கூறுகையில், மிகக் கடுமையாக மழை பெய்துகொண்டிருந்தது. வானிலை மோசமாக இருப்பதாக தரை இறங்கும் முன்பே விமானி எங்களுக்கு எச்சரிக்கை அளித்தார். அவர் இரண்டு முறை பாதுகாப்பாக தரை இறங்க முயற்சி செய்து, ஆனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.

விமானம் ஓடுபாதையிலிருந்து விலகித் தடுமாறி இரண்டாகப் பிளந்தது. வீரம் நிறைந்த விமானியும், விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்களுமே தங்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: மூணாறு நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி; 80 பேர் மாயம்… தொடரும் ரெட் அலர்ட்

இந்நிலையில், விபத்து குறித்து ஆய்வு நடத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து, விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட மத்திய சிவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி, இந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.