கோயில்களில் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (5-10-2021) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையின் வாயிலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை செயல்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக அன்னைத் தமிழில் அர்ச்சனை,

திருக்கோயில் நிலங்கள் மீட்பு, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடக்கம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் திருக்கோயில்களில் நடும் திட்டம், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்,

பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிகழ்வு போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்கள் முதல்வர் ஆணைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி 2021-22 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 5.9.2021 முதல் அனைத்து திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு 7.9.2021 அன்று சட்டப்பேரவையில், திருக்கோயில்களில் பணிபுரியும் தலைமுடி மழிக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 5,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5-10-2021) சென்னை வேப்பேரி, பி.கே.என். அரங்கத்தில், திருக்கோயில்களில் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு ரூ.5,000 மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 25 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

அதன்படி, திருக்கோயில்களில் பணிபுரியும் 1,744 முடி திருத்தும் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 ஊக்கத்தொகை அந்தந்த திருக்கோயில்களிலிருந்து வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 10.47 கோடி செலவிடப்படும்.

இதனால் திருக்கோயில் முடிதிருத்தும் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.