கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பல கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் அண்மையில் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. மதுராந்தகத்தில் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக நாளிதழில் செய்தி வெளியானது.

அதில் குறிப்பாக அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு சென்று கொட்டி வைத்த நெல் குவியல்கள் அனைத்தும் மழையில் முழுவதும் நனைந்து சேதமடைந்துள்ளது.

ஏற்கனவே, பல கஷ்டங்களுக்கு இடையே அறுவடை முடிந்து விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லும் வீணாகிப்போனது விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனால், பல கோடி மதிப்புள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன.

மேலும் வாசிக்க: அதிகாரிகள் அலட்சியத்தால் கொள்முதல் செய்யாமல் வீணாகும் நெல் மூட்டைகள்

இதனால், விவசாயிகளுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

மேலும் இந்த வழக்கில் நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மே 22-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.