பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை செய்யும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னா மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார்.

அதில், சென்னை மாநகர் பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் அனுமதி பெற்ற 30 பரிசோதனை மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அரசு பரிசோதனை மையங்கள், 18 தனியார் மையங்கள். இந்த மையங்களில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் விவரம் மற்றும் தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.

அவ்வாறு மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள வருகைதரும் நோயாளிகளின் பெயர், அவரின் முழு முகவரி, வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் கடந்த 15 நாட்களாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்களை அதற்கென உருவாக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மற்றும் CV வலைதளத்தில் பதிவேற்றம் செய்தல், சோதனை செய்ய வருபவர்களின் சுய விவரங்களை சேகரித்து அவர்களின் கையொப்பம் பெறுதல் கட்டாயம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6,000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனை மையங்கள் பின்பற்ற வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளுக்கு சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை சேகரிக்கும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த பரிசோதனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க: 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை இவ்வளவு உயர்வா… வேதனையில் வாகன ஓட்டிகள்