கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக கொரோனா வைரஸை நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து ஆய்வுக்கு தயார் செய்து வருகின்றனர்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான முயற்சிகள் அனைத்தையும், உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தற்போதுவரை 14 வகையான தடுப்பு மருந்துகள் ஆய்வில் பல்வேறு கட்டங்களை அடைந்துள்ளன. அதில் நான்கு தடுப்பூசி மருந்துகள் இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டிவிடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய அறிவியல்துறை அமைச்சகம் உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கொரோனா வைரஸை (SARS-CoV-2) நிலையாக வளர்க்கும் முறையை உயிரணு மற்றும் நுண்ணுயிரியல் மையம் (Centre for Cellular and Micro Biology – CCMB) உருவாக்கியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பலரிடமிருந்து இந்த வைரஸ்களை CCMB மையத்தைச் சேர்ந்த வைராலஜி நிபுணர்கள் பிரித்துள்ளனர்.

பரிசோதனைக்கூடங்களில் இந்த வைரஸ்களை வளர்ப்பதன் மூலம், தடுப்பு மருந்து உருவாக்குதல் மற்றும் கொரோனா சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகளைப் பரிசோதிக்க முடியும். மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளுக்கும், இந்த வைரஸ் வளர்ப்பு உதவும். மேலும் சோதனைக் குழாய்களில் வைரசுக்கு எதிரான மருந்துகளின் செயல்பாட்டுத் திறனைப் பரிசோதிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க: கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து நோய் பரவாது- சிங்கப்பூர் அதிரடி ஆய்வு முடிவு