2020 ஆம் ஆண்டு நோய்த் தொற்றின் ஆண்டாகவே மாறியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இருந்து கொரோனா என்னும் வைரஸ் பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சீனாவின் பயனூர் பகுதியில் உள்ள சிலர் புபோனிக் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே சீனாவின் பயனூர், மங்கோலியா போன்ற பகுதிகளில் புபோனிக் பிளேக் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளில் மூன்றாம் கட்ட புபோனிக் பிளேக் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜூலை மாதம் ஆரம்பித்தது முதலாக பலர் புபோனிக் பிளேக் அறிகுறியால் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் மக்கள் மிகவும் கவனமாக தங்களை தாங்களே தனிமைப்படுத்தி, சுகாதாரத்தைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

புபோனிக் பிளேக் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பலரும் மர்மோட் இறைச்சியை உட்கொண்டுள்ளனர். மர்மோட் என்பது சீனாவில் காணப்படும் ஒரு வகையான அணில். ஒருவேளை இந்த அணில் கறியை உட்கொண்டதால் புபோனிக் பிளேக் நோய் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க: 2021.க்கு முன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பில்லையா..

புபோனிக் பிளேக் ஒரு பாக்டீரியா தொற்று. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. பிளேக்கில் மூன்று வகைகள் உள்ளன. அவை புபோனிக், செப்டிசெமிக் மற்றும் நிமோனிக்.

இதில் புபோனிக் பிளேக் நிணநீர் மண்டலத்தை பாதிக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதி. நிணநீர் மண்டலத்தை பாதிக்கும் பிளேக் பாக்டீரியா வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது

இதன் அறிகுறிகள், காய்ச்சல் மற்றும் குளிர், தலைவலி, தசை வலி, களைப்பு, வலிப்புத்தாக்கம், சிலருக்கு வலிமிக்க வீங்கிய நிணநீர் சுரப்பிகளையும் உண்டாக்கலாம்.

புபோனிக் பிளேக் தொற்றால் பாதிக்கப்பட்ட ஈக்களை தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகளான எலி, அணில் அல்லது சில வகை உண்ணிகளுடன் தொடர்பு கொள்ளும், பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது நபருடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலமும் புபோனிக் பிளேக் தொற்று ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.