கொரோனா வைரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்பிவிடுவேன் என்றும் எஸ்.பி.பி தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 14) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று இரவு அவரின் உடல்நலம் திடீர் என்று மோசமடைந்தது. மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அவரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தற்போது எஸ்.பி.பி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் நிலைமை குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வேண்டியுள்ளனர்.

மேலும் வாசிக்க: பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி- வைரமுத்து உருக்கம்