கொரோனா கிளஸ்டராக மாறியுள்ள சென்னை ஐஐடியில் இதுவரை 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்பது மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனையடுத்து, மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன்,

முதுநிலை பட்டப்படிப்பு, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 7 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், ஐந்து ஊழியர்கள் உட்பட மொத்தம் 71 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை ஐஐடியில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னையில் ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள ஐஐடி மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை ஐஐடியில் இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 33 பேருக்கு உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடி கொரோனா கிளஸ்டராக மாறியுள்ளது. இதை பொதுமக்கள், மாணவர்கள் பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஐஐடி கேண்டீனில் மாணவர்கள் மொத்தமாக அமர்ந்து, உணவருந்தாமல், உணவை விடுதிக்கு எடுத்துச் சென்று சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும்படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது” என்று .தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சென்னை ஐஐடி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்களும் தங்கள் அறைகளில் தங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவு வழங்கப்படும்.

அனைத்து மையங்கள், ஆய்வகங்கள் மற்றும் நூலகம் உட்பட அனைத்து துறைகளும் தற்காலிகமாக உடனடியாக மூடப்படுவதாகவும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தொடரும் முறைகேடு; போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்து மோசடி