கொரோனா தொற்றுக்கு எதிராக, மாட்டு சாண சிகிச்சை முறை பல நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் இந்தியா பேரழிவைச் சந்தித்து வருகிறது. இதுவரை 2,33,40,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,54,197 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்னும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

மேலும் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாவோர் எண்ணிக்கை எண்ணிலடங்காத வகையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், மாட்டு சாணங்களை உடலில் பூசுவதாலும், கோமியம் குடிப்பதாலும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் என உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே மாட்டு சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீஸ்வாமிநாராயண் குருகுல் விஷ்வவித்யா பிரதிஷ்தனம் என்ற பெயரில் கோசாலை ஒன்று இயங்கி வருகின்றது.

இங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, மாட்டு சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது. கடந்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறும் சுமார் 15 பேர் இங்கு வந்து மாட்டு சாண தெரபி எடுத்துள்ளனர். இதில் மாட்டு சாணம், கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, பின்னர் பால் மூலமாக அவை கழுவுகின்றனர். மேலும் சில மருத்துவர்களே இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வருவதாகவும் பொய்பிரச்சாரத்தை பாஜகவினர் பரப்பிவிடுவதும் வேதனைக்குரியதாக உள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் பெண்கள் பிரிவு தலைவர் தேசாய் கூறுகையில், “மாட்டு சாணம் என்பது கழிவு. மாட்டுசாணம், கோமியத்தை உடலில் பூசுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது மற்றும் கொரோனா வைரசில் இருந்தும் அவை பாதுகாக்காது. ஆனால் மியூகோர்மைகோசிஸ் போன்ற இதர பாதிப்புக்களை அவை ஏற்படுத்தலாம்.

கொரோனா வைரஸ் தொற்றை, தடுப்பூசிகளின் மூலமே கட்டுப்படுத்த முடியும். இது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.

‘சென்ட்ரல் விஸ்டா’ நிதி 35000 கோடியை தடுப்பூசிக்கு பயன்படுத்துங்கள்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்