திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், கலைத்துறையினர் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக் குறைவு காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டடு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலமானார். கொரோனாவுக்கு பலியான முதல் எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.

கல்லீரல், சிறுநீரக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, உடலில் சில பிரச்சனைகள் இருப்பதால் கொரோனா பாதிப்பிற்குள்ளாக நிறைய வாய்ப்பிருப்பதும், “ஒன்றிணைவோம் வா” மூலமாக தனது சேப்பாக்கம் தொகுதியிலும், தன்னுடைய மாவட்டத்தில் உள்ள ஏனைய 4 தொகுதிகளிலும், கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கள பணியாற்றியவர் ஜெ.அன்பழகன்.

ஜெ.அன்பழகன் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தி இன்று காலை நேரத்திலா வர வேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றி பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர். சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை ஏற்க என் மனம் மறுக்கிறது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல் திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்ற சிறிதும் ஓய்வின்றி களப் பணியாற்றியவர். இந்த சூழலில் சகோதரர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி இன்று ஜூன் 10) நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.

கழக ரத்தம் பாய்ந்த உடல், கலைஞர் ஒருவரே தலைவர் என்ற உணர்வு, தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தகுதி மிக்க துணிவு, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சளைக்காமல் போராடும் வீரம் கொண்டவர். மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைக்கும் வல்லமை என உறுதியுள்ள உண்மையான உடன்பிறப்பாக இறுதி மூச்சுவரை இடையறாது செயல்பட்டவர்.

மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதன் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்தினார். இனி எப்போது அவருடைய பாசமுகம் காண்பேன்? ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு, கழகப்பணி, தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

கழகத்தின் தீரமிக்க உடன்பிறப்பு மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஜெ.அன்பழகன் அவர்களின் தியாக வாழ்வைப் போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெ. அன்பழகன் திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.