தன் மீது தொடரப்பட்ட மானநஷ்ட ஈடு வழக்கை ரத்து செய்யகோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ரூ.1 கோடி நஷ்ட ஈடுகோரி எடப்பாடி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த பொது, இது தொடர்பாக முதலமைச்சர் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
 
இதையடுத்து மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட ஈடு வழக்கை தொடர்ந்தார்.
 
அதில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச அவர்களுக்கு தடை விதிக்கவும், மேலும் ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்த 7 பேருக்கும் தடை விதித்து, மேலும் இது தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
 
இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரத்து செய்யக்கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, மேத்யூ சாமுவேலின் மனு குறித்து முதலமைச்சர் பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.