கொடநாடு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணையை தொடங்கியுள்ளது தமிழ்நாடு காவல்துறை. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்று விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மேல் விசாரணைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே கொடநாடு வழக்கின் சாட்சியான அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய காவல்துறைக்கு முழு அனுமதி உள்ளது என்று தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தின் அனுமதியின்றி மேல்விசாரணை நடத்தப்படுவதாகவும், மேல்விசாரணை நடத்திக் கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவில்லாமல் தான் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் வாதத்தை கேட்ட நீதிபதிகள் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தனர். மேலும் கொடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் இருக்கிறது என கூறிய நீதிபதிகள்,

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என கூறி அனுபப் ரவியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- தனிப்படை குழு அமைப்பு