திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் திருமுருகன் காந்தியை போலீஸ் விசாரிக்கலாம் என்று நீதிபதி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து திருமுருகன் காந்தி ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை  ஆணையத்தில் பதிவு செய்தார். போலீசாரின் கெடுபிடிகளை தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களாக வெளிநாட்டிலேயே தங்கி இருந்தார். அவரை காவல்துறை கைது செய்ய பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் திருமுருகன்  காந்தியை கைது செய்ய முடியவில்லை.

மேலும், தமிழக காவல்துறை சார்பில் தேடப்படும் குற்றவாளியாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ்  அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா மன்றத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருமுருகன் காந்தி விமான மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தனிப்படை போலீசார் மூலம் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க சைதாபேட்டை நீதிமன்ற நீதிபதி  பிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.