கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 3 பேர் உட்பட, துபாயில் உள்ள பைசல் பரீத் என்பவரையும் கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ).

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவத்தில் தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் கைது செய்யப்பட்டார். வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தங்கம் கடத்தும் முக்கிய நபர்களின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் சர்வதேச விமான நிலையங்கள் வழியாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கை விசாரித்து வரும், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எர்ணாகுளம் ஜலால், மலப்புரம் முகமது ஷபி, கொண்டோட்டி ஹம்ஜத் ஆகியோர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் கேரள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க: தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது; பினராயி விஜயன் அதிரடி

முன்னதாக, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான துபாயை சேர்ந்த பைசல் பரீத் என்பவர் மீது, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தூதரகம் வழியாக தங்கம் கடத்தினார் என்று என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் பைசல் பரீத்க்கு ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 12ஆம் வகுப்பு படித்த ஸ்வப்னா பி.காம் சான்றிதழை போலியாக தயாரித்து பயன்படுத்தி அரசு துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளதும் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.