சத்தீஸ்கர் மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கடந்த 2 நாட்களில் மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவளிக்கும் போது மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு குழந்தைகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த மூன்றாவது குழந்தை நான்கு மாத குழந்தை, வியாழக்கிழமை இறந்தது. அக்குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

குழந்தைக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. முன்னதாக புதன்கிழமை 18 மாத குழந்தை மற்றும் மூன்று மாத குழந்தை இருவரும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க: கொரோனா பாதிப்பால், இந்தாண்டில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில்.. அதிர்ச்சி தகவல்

உயிரிழந்த முன்று குழந்தைகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு திரும்பியவர்கள். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வெப்பம் மற்றும் கூட்டம் அதிகமாக இருந்ததே இந்த மரணங்களுக்கு காரணம் என்று அதிகாரிகள் கூறினர்.

இதுகுறித்து பேசிய மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ, மையங்களில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு அதிக சுமைகளை தாங்க வேண்டிய உள்ளது என்றார்.

மே 14 முதல் தற்போது வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.