குழந்தை திருமணம் நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், அதில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (31-5-2021) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அதுகுறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைத் திருமணத்தைத் தடுக்க காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும், சமூக நலத்துறையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பின்னர் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

இக்கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூக நல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் கவிதா ராமு மற்றும் துறையின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக குழந்தை உரிமை அமைப்பு (Child Rights and You) சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 40% தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் குழந்தை திருமணம் பரவலாக உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

லட்சத்தீவில் பாஜக நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும்- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்