தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 01) பேசியதாவது, “கோட்டையிலே இருந்தாலும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காகச் சிந்தித்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த போது, குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று வாரியத்தை தொடங்கினார். அதன்பிறகு குடிசைமாற்று வாரியம் சார்பில் பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

அன்றைக்கு ஒன்றிய அமைச்சராக இருந்த பாபுஜி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய பாபு ஜெகஜீவன்ராம் அவர்களே, அந்தத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

மேலும், இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற அவரது எண்ணத்தையும் அன்றைக்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார். அந்தளவிற்கு இந்தக் குடிசை மாற்று வாரியம் மிகச் சிறப்பாக தன்னுடைய கடமையைச் செய்திருக்கிறது, செய்து கொண்டு வருகிறது.

ஏழை எளிய மக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த வாரியம், இனிமேல் ‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ (TAMILNADU URBAN HABITAT DEVELOPMENT BOARD) என்ற பெயரிலே அழைக்கப்படும் என்பதை இந்த மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல; குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும்; அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

லெட்டர்பேட் ஜெ.பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு!