கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பழம்பெரும் பொருட்களை மத்திய தொல்லியல்துறையிடம் தரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ப்ராபகர் பாண்டியன் என்பவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பெங்களுருவில் உள்ள தொல்லியல்துறை கண்காணிப்பாளரிடம் தர நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல்துறை ஆணையர் முன்னிலையில் கீழடி பொருட்களை தரலாம் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்த்திருந்தது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என வழக்கறிஞர் கனிமொழி மதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கீழடியில் நடந்த 4ம் கட்ட ஆய்வில் தங்கம் உள்ளிட்ட 7000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பொருட்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை கண்டறிவதற்காக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கீழடி அகழாய்வில் 4-ம் கட்ட ஆய்வு பணியில் 6 தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்த ஆபரணங்களின் மதிப்பு மற்றும் வயது குறித்து ஆய்வு செய்ய கனடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்துக்கு அனுப்ப உள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் என தொல்லித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.