விவசாய விரோத வேளாண் சட்டங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, “காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வரம்பற்ற பதுக்கலுக்கு வழிவகுக்கும் வேளாண் சட்டங்களால், காய்கறி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்து மக்களைக் காக்கவும், விவசாயிகள் நலனுக்காகவும் பஞ்சாப், கேரள மாநில அரசுகள் காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம்” செய்யும் சட்டங்களை இயற்றியுள்ள.

அதேபோல் திமுக ஆட்சியில் ‘விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்’, ‘காய்கறிகளுக்கு அடிப்படை விலை’ நிர்ணயம் செய்யும் சட்டம் ஆகியவற்றை இயற்றி #தமிழகம்_மீட்போம். இது உறுதி என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கும் மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் காரிருள் சூழ வைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியது. இந்த வேளாண் சட்டங்களினாலும், அவற்றை ஆதரித்து வாக்களித்துள்ள எடப்பாடி அதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையாலும், தீபாவளிப் பண்டிகை நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கிறது.

மேலும் பல்வேறு காய்கறி பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியச் சந்தை வந்து விட்டது. பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம், உருளைக் கிழங்கு, காய்கறிகள், என அனைத்துப் பொருட்களும், இந்த மூன்று சட்டங்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட செப்டம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு மக்களுக்குத் தாராளமாகக் கிடைப்பது செயற்கையாகத் தடுக்கப்பட்டுவிட்டது.

விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு தீபாவளிப் பண்டிகை நேரத்தில் இடைத்தரகர்களால் விலை ஏற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் சுதந்திரம் மற்றும் பொதுமக்கள் நியாயமான விலைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் சுதந்திரம் ஆகிய இரண்டையும் பறித்திருக்கிறது.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, அவர்களுடைய செலவு மற்றும் உழைப்புக்கேற்றபடி உரிய விலை கிடைக்க வேண்டும், மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ‘உழவர் சந்தைகள்’ தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான உழவர் சந்தைகளை அதிமுக அரசு செயலிழக்க வைத்துவிட்டது.

மூன்று வேளாண் சட்டங்களின் பாதிப்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்றிட குறைந்த பட்ச ஆதார விலைக்குக் குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சிறைத் தண்டனை என்று பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது.

அதேபோல் கேரள மாநில அரசு இந்தியாவிலேயே முதல் முறையாகக் ‘காய்கறிகளுக்கு அடிப்படை விலை’ நிர்ணயிக்கும் சட்டம் இயற்றியுள்ளது. 16 வகை காய்கறிகளுக்கு விவசாயிகளின் உற்பத்தி விலையில் இருந்து 20% அதிகம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த காய்கறிகளின் சந்தை விலை குறைவாக இருந்தால் கூட இந்த அடிப்படை விலை கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டத்தில் உறுதி செய்திருக்கிறது.

பஞ்சாப், கேரள மாநில அரசுகளை போன்று விவசாயிகள் வாழ்வில் விளக்கேற்றும் அந்தச் சட்டங்கள் தமிழ்நாட்டிலும் நிறைவேற்றப்பட வேண்டும். வரம்பின்றி இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக அரசு சட்டம் கொண்டு வரவில்லையென்றால், விரைவில் மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைக்கப்போகும் திராவிட முன்னேற்றக் கழகம், விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி, விவசாயப் பெருமக்களின் துயர் துடைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் உறுதியளிக்கிறேன்” என்று அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம்- அய்யாக்கண்ணு