கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கைது ஏன்.. என காவல்துறைக்கு கேள்வி எழுப்பி, இதுகுறித்து விளக்கமளிக்காவிடில் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி சக்தி இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஸ்ரீமதி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கும் உரிய விளக்கம் அளிக்கப்படாத நிலையில், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் மற்றும் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த மர்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் பள்ளி தொடர்பான சிசிடிவி பதிவுகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 38 நாட்களாக விசாரணை நடைபெற்றுள்ளதால், மேலும் காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர்கள் தரப்பில் மாணவியின் உடல் இரண்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை என்றும், மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் பெற்றோர் தரப்பில் தங்களது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்த வழக்குகளில் காவல்துறை நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியபோது, விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தனர்? ஆசிரியர், தாளாளராக இருப்பதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? போன்ற விவரங்களை கேட்டு வந்திருக்க வேண்டும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும், இல்லை எனில் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.

முன்னதாக சக்தி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகம் தெரிவிப்பதுபோல் மாணவி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் மாணவியின் தாய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.