கள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 329 பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற ஊரில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தங்கி படிக்கும் வசதியும் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த வாரம் விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் காவல்துறையினர், மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அந்த ஊரைச் சோர்ந்தவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதில் உள்ளூர் காவல்துறை மெத்தனம் காட்டிய நிலையில், நேற்று (17.7.2022) மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பள்ளி பேருந்துகளை தீ வைத்து கொளுத்தியதுடன், பள்ளி கட்டிங்களையும் சேதப்படுத்தினர்.

அத்துடன், கலவரத்தை அடக்க வந்த காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தி, காவல்துறையினர் வாகனங்களையும் தீ வைத்து எரிந்தனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக காவலர் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் காவல்கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

இதனால் சூழல் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பின்னர் கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலர் பனிந்தர்ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளும் என்றும் அறிவித்தனர்.

முன்னதாக பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் பள்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 329 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல், காவல்துறையினரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.