விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “சண்டக்கோழி 2” படத்தில் விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே.எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் விஷால், “24வது படம் முடித்து ‘சண்டக்கோழி 2’ 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது. இப்படம் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காட்பாதர் படத்தை போல் உருவாகியுள்ளதாகக் கூறினார்.

தமிழில் ‘சண்டக்கோழி 2’, பிறமொழிகளில் ‘பந்தையகோழி 2’ இரண்டுமே அக்டோபர்-18ல் ஆயுத பூஜை அன்று வெளிவரவுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் விஷால் பேசுகையில், “நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், கடந்த 16ஆம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய வீடியோ வைரலானது.

கருணாசின் சர்ச்சை பேச்சால் நுங்கம்பாக்கம் போலீசார் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கருணாஸை கைது செய்தனர். பின்னர் கருணாஸ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் கருத்துரிமையும் பேச்சுரிமையும் உள்ளது. கருணாஸ் எல்லை மீறியதால் தான் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் சென்று கருணாஸை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்” எனவும் நடிகர் விஷால் குறிப்பிட்டார்.