அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட ‘கருக்கலைப்பு சட்ட விரோதம்’ என்ற சட்டத்திற்கு எதிராக பெண்கள் அமைப்பினர் பலரும் ஒன்றிணைந்து பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக ஆயிரக் கணக்கான பெண்கள் பேரணி செல்கின்றனர். சமீபத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில்  கருக்கலைப்பு தொடர்பான சட்டம், பெண்களை எதிர்வினையாற்றத் தூண்டியது.

உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் ‘கருக்கலைப்பு சட்ட விரோதம்’ என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் அண்மையில் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் படி, கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்டால், அதற்குப் பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி இல்லை.

மேலும், ஒருவேளை கருக்கலைப்பு செய்வதாக இருந்தால், உரிய அனுமதி பெற்று சிசு உருவாகுவதற்கு முன்னதாகவே கருக்கலைப்பு செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்தச் சட்டம் அம்மாகாண மக்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என அங்குள்ள பெண்கள் அமைப்பினர் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையிட்டனர்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது. இதனால் பெண்கள் தங்களின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அதன் ஒருபகுதியாக வாஷிங்க்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை என்று முழக்கங்களுடன் பேரணியாக சென்றனர். அதேபோல், ஹூஸ்டன் நியூ யார்க், டெக்ஸ்சாசிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அமெரிக்காவின் உச்சநீதிமன்ற வாயிலில் ஏறி ‘என் உடல் என் உரிமை’ என்றும் பெண்கள் முழக்கமிட்டனர். அமெரிக்காவின் முன்னணி பாடகியும் நடிகையுமான பெட்டே மிட்லர் ‘செக்ஸ் ஸ்ட்ரைக்’ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், இன்று அமெரிக்காவின் பல பகுதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் மருத்துவர் ஒருவர் கூறுகையில், “கருவில் சிசுவின் இதயத்துடிப்பு உணரப்பட்ட காலத்திற்குப் பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி இல்லை என சட்டத்தில் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு கருவின் இதயத்துடிப்பை உணரவே 6 வாரங்கள் ஆகும். இதனால் கருக்கலைப்பு என்பதே இல்லாமல் போய்விடும். இப்படி பெண்களை வஞ்சிக்கும் கடுமையான சட்டங்கள் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதி” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இச்சட்டத்திற்கு ஆதரவாளர்கள் கூறுகையில், பொதுவாக ஆறு வாரங்களுக்குள் குழந்தைகளின் இதயம் துடிக்கத் தொடங்கும். எனவே இந்த சட்டப் படி, யார் வேண்டுமானாலும், அந்த ஆறு வார காலத்துக்குப் பிறகு கருக்கலைப்பு செய்யும் மருத்துவர் மீது வழக்குத் தொடர வழிவகுக்கிறது இச்சட்டம். பிறக்காத குழந்தைகளைப் பாதுகாப்பதுதான் இச்சட்டத்தின் நோக்கம் என்கிறார்கள்.