காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் ‘பாரத் ஜோடா பாத யாத்திரை’ செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறை, மதவெறி, இனவெறி, தவறான பொருளாதார கொள்கையால் வாழ்வாதாரம் பாதிப்பு, வேலைவாய்ப்பு திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் கட்சி பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.

அதுபோல, மக்களை எளிதில் தொடர்பு கொள்வதிலும், காங்கிரஸ் கட்சியின் அறிக்கைகள், நிகழ்வுகள் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வகையிலும், கட்சியை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. நாட்டு மக்களிடம் முக்கிய பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து கட்சித் தலைவர்களுக்கும் பயிற்சி அளிக்கவிருக்கிறது.

மேலும் மக்களிடையே காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டவும், கட்சியின் கொள்கை, அரசியல் சாசன உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பேண, பிரிவினையை எதிர்கொள்ள ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆதரவைத் திரட்டும் வகையில் பாரத் ஜோடா பாத யாத்திரை மேற்கொள்கிறது.

பாரத் ஜோடா பாத யாத்திரையானது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி 3500 கி.மீ தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 150 நாளில் நிறைவடையும். கடந்த பல தசாப்தங்களுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் இந்த முன்னெடுப்பிற்கு வரவேற்புகள் எழுந்துள்ளன.

இந்த யாத்திரை, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு அறிவித்துள்ளது. இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7 முதல் கன்னியாகுமரியில் தொடங்குகிறது.

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 80ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (09/08/1942) தான் இந்திய தேசிய காங்கிரஸ் நமது போற்றுதலுக்குரிய தலைவரான மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கி போராடியதன் மூலம் 5 ஆண்டுகள் கழித்து நாடு விடுதலை அடைந்தது.

அதேபோல் இன்று நமது இந்திய தேசிய காங்கிரஸ் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத ஒற்றுமை யாத்திரை’ செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. 12மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி ஏறக்குறைய 3500 கி.மீ தூரத்தை இந்த பாதயாத்திரை 150 நாளில் நிறைவடையும்.

இளந்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்களும் துடிப்பு மிக்க தொண்டர்களும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அடக்குமுறை,மதவெறி, இனவெறி, பகுத்தறிவில்லாத அரசியலுக்கு மாற்று சக்தியாகவும்,

மேலும் தவறான பொருளாதார கொள்கையால் வாழ்வாதாரம் பாதிப்பு, வேலைவாய்ப்பு திண்டாட்டம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு போன்ற அவலங்களை எதிர்க்க நினைக்கும் நல்ல உள்ளங்கள் இந்த பாதயாத்திரையில் பங்கு பெற வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் அன்புடன் கேட்டுக் கொள்கிறது”
என்று கூறப்பட்டுள்ளது.