மெரினா கடலுக்குள் கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய சீமான், கடலில் பேனாவை வைத்தால் உடைப்பேன் என ஆவேசமாக பேசி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (31.01.2023) காலை நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் தங்களது தரப்பு கருத்தை முன்வைக்க பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல் எழுப்பப்பட்டது.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். அரங்கில் சீமான் பேசும்போது கூச்சல் எழுப்பப்பட்டது. இருப்பினும், கடலுக்குள் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

கூட்டத்தில் பேசிய சீமான், பேனா நினைவு சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தும் வரை போராடுவேன். உங்கள் கூச்சலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன். மாற்று கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம்.

ஐயா கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்க்கவில்லை, ஏற்கிறோம். ஆனால், கடலுக்குள் வைக்கக் கூடாது. அவ்வாறு வைப்பதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம். கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடலில் பேனாவை வைத்தால் ஒரு நாள் வந்து உடைப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.