தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய கொரோனா- ஓமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுப்படுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் 13.12.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30-11-2021 நாளிட்ட அறிக்கையின்படி, கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா- ஓமிக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பொது மக்கள் நலன்கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி,

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31-12-2021 மற்றும் 1-1-2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

அதேபோல் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில், அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டும், 3-1-2022 முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும்” என்று அறிவித்துள்ளது.