இந்தியாவில் இருந்து சென்றவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளதாகவும், 2011க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் குடியுரிமையை துறந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில், 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டார்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களில் 2011க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர்.

மேலும் இந்தியாவில் இருந்து சென்ற இவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று கூறிய வெளியுறவுத் துறை அமைச்சர், அந்த நாடுகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.