கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர், நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு 50 வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், “கஜா புயலால் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும், துரத்தையும் பார்க்கும்போது வேதனை அடைந்தேன். எவ்வளோ நல்ல உள்ளம் உள்ளவர்களும், அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்.

ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாக ஒரு குடும்பம் நிற்பதைப் பார்த்தேன். வேதனைஅடைந்தேன். அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும். மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும். அந்த வீடு மட்டுமில்லை… இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட வீடுகளை கட்டித் தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீவு ஏற்படுத்த உள்ளேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைக்காட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அன்பு பத்திரிகை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்…உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, “முதல் கட்டமாக கஜா புயலால் வீடு இழந்து வாடும், இந்த அம்மாவிற்கு எனது முதல் வீடு கட்டித்தரப்படும்” என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.