அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பயணித்த விமானத்தில் சக பயணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் இருந்து சென்னை வழியாக மும்பை செல்ல வேண்டி ஏர் இந்தியா விமானம் நேற்று (30.11.2021) சென்னை வந்து கொண்டிருந்தது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் பயணித்தனர். விமானம் மதியம் 2 மணியளவில் சென்னை வந்தடைந்தது.

பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கிய பின் மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (72 வயது) என்ற ஒரு பயணி மட்டும் நீண்ட நேரமாக இறங்காமல் இருந்தார். இதனால் விமான ஊழியர்கள் அவரை எழுப்பினர். அப்போது சண்முகசுந்தரம் சுயநினைவு இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது சண்முகசுந்தரம் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சண்முகசுந்தரம் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் மும்பை செல்ல விமானம் தயாரானது. ஆனால் விமானத்திற்குள் பயணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் விமானி விமானத்தை இயக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து விமானம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இதன்பின்னர் மாலை 5 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்த விமானத்தில் பயணி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.