டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சுஷில் குமாருக்குப் பிறகு மல்யுத்த விளையாட்டில் 2வது வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் ரவி தாஹியா பெற்றுள்ளார்.

மல்யுத்தப் போட்டி ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா, ரஷ்ய வீரர் ஜாவுர் உகுவேவை எதிர்கொண்டார்.

முதல் சுற்று ஆரம்பத்தில் 2-2 என்ற புள்ளிக்கணகில் சமநிலையில் இரு வீரர்களும் இருந்தனர். அப்போது இந்திய வீரர் சற்றே சறுக்கலை சந்திக்க ரஷ்ய வீரர் புள்ளிகளைக் குவித்தார். இறுதியில் ரஷ்ய வீரர் 7- 2 என்ற கணக்கில் வாகை சூடினார்.

இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரரிடம் தோற்றார். இதனால், ரவிக்குமார் வெள்ளிப் பதக்கமே பெற முடிந்தது.

இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்துள்ள இரண்டாவது வெள்ளிப்பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

முன்னதாக, இன்று காலை மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் ரெபிசாஜ் ரவுண்டில் பங்கேற்றார். அவர் ரஷ்யாவின் வெலேரியாவிடம் 1-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கத்திற்கு போட்டியிடம் வாய்ப்பை இழந்தார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் பல்வேறு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் ரவிக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலங்களில் மேலும் பல வெற்றிகளை குவிக்க ரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்: வரலாற்று சாதனை படைத்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!