தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 6,472 பேர் புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இன்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3,933 ஆண்களுக்கும் 2,539 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சென்னையில், 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 63 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் 52,939 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 62,112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று 5,210 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்தாலும் இறப்பு விகிதம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் விடுபட்ட 444 கொரோனா பலி எண்ணிக்கையை கணக்கில் எடுத்துள்ளதாக நேற்று (2ஜூலை 22) சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதனால், கொரோனா இறப்பு விகிதமும் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் 1 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று 4965 பேர் பாதிப்பு; 75 பேர் பலி