அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிரைலரின் முதல் காட்சியிலேயே வழக்கறிஞரான அஜித், குற்றவாளி கூண்டில் இருக்கும் ஒரு இளம்பெண்ணிடம் ‘ஆர் யூ வெர்ஜின்’ என்று கேட்பதும் அதற்கு அப்பெண் ‘இல்லை’ என்று கூறுவதுமே பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியும் அதன் பின்னர் எதிர்பார்ப்பும் ஏற்படுத்துகிறது.

நீதிமன்றத்தில் அஜித்தும், ரங்கராஜ் பாண்டேவும் ஆவேசமாக வாத, பிரதிவாதங்கள் நடத்தும் காட்சிகளும், சாட்சி சொல்ல வந்தவர்கள் டென்ஷனாகும் காட்சியும், தொடர்ந்து போலீஸ் அதிகாரியிடம் தனது ஆக்ரோஷத்தை காட்டும் காட்சியிலும் சரி, கோபத்திலும் பொங்கு எழும் காட்சியிலும் சரி, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனையே மிஞ்சியுள்ளார் நம்ம தல அஜித். ஒருபுறம் கோர்ட்டில் வாதாடுவதும், மறுபுறம் சண்டையிடும் காட்சியிலும் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

குறிப்பாக ‘அப்படியெல்லாம் நடக்காது, நடக்கக்கூடாது’ என்று அஜித் பேசும் அந்த ஆழமான வசனம் நிச்சயம் திரையரங்குகளில் தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷம், நீதிமன்ற காட்சிகளில் உணர்ச்சிவசப்படுதல், ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்திறீங்க’ என்று போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பும் அமைதியான வசனமும் நிச்சயம் அஜித் ரசிகர்களை திருப்தி செய்யும்.

யுவன்ஷங்கர் ராஜாவின் அதிரடி பின்னணி இசை, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக இருக்கும் என்பது டிரைலரில் இருந்தே தெரிகிறது. இந்த டிரைலரில் வித்யாபாலன் காட்சி மட்டும் எதுவும் இல்லை.

டிரைலரின் தொடக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது புகைப்படத்தை இடம்பெறச் செய்து நீங்கா நினைவுகளுடன் என்று பதிவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் அஜித் ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தும் ஒரு படம் தயாராகிவிட்டது என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.