ஒன்றிய பாஜக அரசால் குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜனவரி 26 குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஊர்திகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடிக்கு அவசர கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்த ஒன்றிய பாஜக அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று கூறியது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான கோரிக்கையை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் நமது அலங்கார ஊர்தி இடம்பெறும்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும். சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைபப்ட கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.