‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். ஒன்றியம் என்ற ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கி பல்வேறு முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது 23-06-2021 நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள். அதற்கான விளக்கம் வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, “ஒன்றிய அரசு என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்று தான் (India, that is Bharat, shall be a Union of States) இருக்கிறது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.

ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல; மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பது தான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லாததை, எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் குறிப்பிட்டு, அதை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய 1957 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ என்று தான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசுகிறபோது, “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன?

அரசியல் இறைமையானது, பொது மக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே – அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது” என்று தான் பேசியிருக்கிறார்.

‘சமஷ்டி’ என்ற வார்த்தையை மரியாதைக்குரிய ம.பொ.சி. அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு – வருக உண்மையான கூட்டாட்சி’ என்று மூதறிஞர் ராஜாஜி அவர்களே எழுதியிருக்கிறார்கள்.

எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத் தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம் – பயன்படுத்துவோம் – பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

‘மல்டி ஸ்டார்’ பொருளாதார ஆலோசனைக் குழு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி