‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல’ என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021க்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு மசோதாவை அறிமுகப்படுத்தியது. தற்போது மீண்டும் 2021இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த ஒளிப்பதிவு திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்கள் மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன.

இந்த ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 பொதுமக்கள் கருத்திற்காக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இது ஜூலை 2 (இன்று) வரை பொதுமக்களின் பார்வைக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும் என சினிமா துறையை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் திரைக்கலைஞர்களின் ஜனநாயக உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது. படைப்பாளிகள் அதிகாரத்தின் கைப்பாவைகளாகவும், அரசை எதிர்த்துக் கேள்விகேட்க முடியாத நிலைக்கும் தள்ளப்படுவார்கள்.

இந்நிலையில் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல. இன்று தான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டு, இந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான இணையதள பக்கத்தை பகிர்ந்துள்ளார்.