நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து ஒடுக்குமுறை சக்திக்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், “நமது நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீது பாஜக பலமுறை தாக்குதல் நடத்தி வருகிறது.

பாஜக அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை குறிவைத்து, நாட்டில் தேர்தல் நெருங்கும் சமயம் எல்லாம் அமலாக்க இயக்குனரகம், சிபிஐ, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், வருமான வரித்துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகளை தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடன் ஒன்றிய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவின் நோக்கத்தை நாம் எதிர்க்க வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் ஒன்றிய அமைப்புகளின் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடுகின்றன.

எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்திருந்தபோது பாஜக கொண்டு வந்த சட்டங்கள் அமலாக்க இயக்குனரகம் மற்றும் சிபிஐ தலைவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒன்றிய அரசிற்கு உதவியுள்ளது.

நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தற்போது சில பக்க சார்பான அரசியல் தலையீடுகளால் மக்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்தாகும். நீதித்துறை, ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியவை நமது ஜனநாயகத்தின் முக்கியமானத் தூண்களாகும். இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால், மொத்த அமைப்பும் குலைந்து போகும்.

அரசாங்கம் சரியாக செயல்படுவதை உறுதி செய்வதும், எதிப்புக் குரல்கள் நசுக்கப்படுவதை எதிர்ப்பதும் எதிர்கட்சிகளுக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள பொறுப்புகளாகும். எனவே ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் இது.

நாம் அனைவரும் முன்னோக்கி செல்லும் வழியை பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொருவரின் வசதிக்கும் பொருத்தத்திற்கும் ஏற்ப ஓர் இடத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டத்திற்கு வர வேண்டும்” என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.