நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பலர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றும், பல இடங்களில் டெபாசிட் தொலைத்தும் உள்ளாட்சித் தேர்தலில் பரிதாபமாக 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்குக் கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 22.2.2022 காலை 8 மணி முதல் 268 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வரலாறு காணாத வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி மாநகராட்சி- 100%, நகராட்சி- 96.4%, பேரூராட்சி- 89.3% என்ற எணிக்கையில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என பேசிவரும் பாஜகவின் வேட்பாளர்கள் பலர் போட்டியிட்ட இடங்களில் ஒரே ஒரு ஒட்டு மட்டுமே வாங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வி அடைந்துள்ளார். அதேபோல், செங்கல்பட்டு நகராட்சியின் 9வது வார்டில் போட்டியிட்ட பாஜகவின் லோகேஷ் கண்ணன் என்பவரும் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராமகிருஷ்ணனுக்கும் ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. இவர்களுக்காவது ஒரு ஓட்டாவது கிடைத்தது.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி 6வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்கு இதுவும் கிடைக்கவில்லை. இவருக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத நிலையில் பரிதாபமாகத் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

அதேபோல் பாஜகவின் கோட்டை என அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பெருமை பேசிவந்த கொங்கு மண்டலத்தில் 89 இடங்களில் டெபாசிட் தொலைத்து உள்ளாட்சித் தேர்தலில் பரிதாபமாக 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பாஜக.

இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தமிழ்நாட்டில் மதவெறியை தூண்ட நினைக்கும் பாஜகவிற்கு தமிழக மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். பாஜகவால் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்பதை தொடர்ந்து தமிழக மக்கள் நிரூபித்து வருகின்றனர்.