ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

கடந்த மார்ச் மாதம் துவங்கி, மே மாதம் நடந்து முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர், கொரோனா பரவல் காரணமாக, ஆண்டின் கடைசிப் பகுதியில் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது.

ரசிகர்கள் இல்லாமல், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, செப்டம்பரில் துவங்கி, நவம்பரில் நடத்தி முடித்துவிட்டது.

இன்று (நவம்பர் 10) நடந்த இறுதிப் போட்டியில் டெல்லி- மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.

பிறகு, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா 51 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள் & 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களை அடித்தார்.

டி காக் 12 பந்துகளில் 20 ரன்களையும், சூர்யகுமார் 20 பந்துகளில் 19 ரன்களையும் அடித்தனர். பின்வரிசையில் களமிறங்கிய பொல்லார்டு, ஹர்திக் பாண்ட்யா மற்றும் குருணல் பாண்ட்யா ஆகியோர் பெரிதாக அடிக்கவில்லை என்றாலும், இஷான் கிஷான் கடைசிவரை களத்தில் நின்று, 19 பந்துகளில் 1 சிக்ஸர் & 3 பவுண்டரிகளுடன் 33 ரன்களை அடித்தார்.

இறுதியில், 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. மேலும் மும்பை அணி தொடர்ந்து இரண்டு முறை கோப்பை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்