எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை உயர் நீதிமன்றங்களின் உத்தரவு இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் வாபஸ் முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா கடந்த 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் இருந்தார்.

இதன் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் வினித் கரண், சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணை நடந்து வந்த நிலையில், வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இதனையடுத்து வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, எம்பி., எம்எல்ஏக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் கடந்த 2 ஆண்டுகளுக்குள்ளாக எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் அரசுகள் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை சிஆர்பிசி 321ன் படி வாபஸ் பெறுகிறார்கள் எனவும் இதனை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், கர்நாடகம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கணிசமான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 76 வழக்குகளும், கர்நாடகத்தில் 61 வழக்குகளும் திரும்பப் பெற மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சிபிஐ தரப்பிடமிருந்து எந்த நிலவர அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை. அதேபோல எம்.பி., எம்.எல்.ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி குறைந்தது 2 ஆண்டுகளாவது அப்பணியில் தொடர வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் வினீத் சரண், சூர்யகாந்த் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ”உயர் நீதிமன்றங்களின் அனுமதியில்லாமல் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை சிஆர்பிசி 321ன் கீழ் அரசு வழக்கறிஞர் திரும்பப் பெறக் கூடாது.

எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை அதே பதவியில் தொடரலாம். இதை உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்கும். எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க சிறப்பு அமர்வு ஒன்றை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வருகிறோம்” என உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் சிபிஐ தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை என்பதையும் கண்டித்த உச்ச நீதிமன்ற அமர்வு, “இதற்கு மேல் எங்களிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை முடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா என ஒன்றிய அரசிடம் கேட்டதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அவ்வாறு ஏதும் செய்யவில்லை.

இதற்கு மேல் ஏதும் சொல்ல இயலாது. இது உங்களுக்கு கடைசி வாய்ப்பு. இப்போது இதைச் செய்யாவிட்டால், சொல்வதற்கு உங்களிடம் ஏதும் இல்லை என ஊகித்துக் கொள்வோம். வழக்கின் விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” என சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டரை நீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் விவாதமின்றி 10 நிமிடத்தில் 3 மசோதாக்கள் நிறைவேற்றியது ஒன்றிய மோடி அரசு!