தனது பெயரில் தனது தந்தை தொடங்கிய அரசியல் கட்சிக்கும், தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் அக்கட்சியில் இணைய வேண்டாம் என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்திருப்பதாகச் செய்தி வெளியானது. கட்சிப் பதிவு மனுவில் கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கு பதிலளித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பதிவை செய்தது நான் எனக் கூறினார்.

இந்நிலையில் தனது தந்தையின் இந்த கட்சிப் பதிவுக்கு எதிராக நடிகர் விஜய் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் ஓா் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன்.

அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னைக் கட்டுப்படுத்தாது.

மேலும், எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சிப் பணியாற்றவோ வேண்டாம். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

மேலும், என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், “இது விஜயின் அரசியல் கட்சி அல்ல. என்னுடைய முயற்சிதான். நாங்கள் கட்சிப்பெயரை பதிவு செய்தது உண்மைதான்.

1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் அங்கீகாரத்திற்காக இதைச் செய்தோம். இதற்கு நாளையே நாங்கள் அரசியலுக்கு வரப்போகிறோம் என அர்த்தமல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்கேப்பான ரஜினி … கழுதை படத்தை போட்டு முராரி ராகம் பாடும் துக்ளக் குருமுர்த்தி