எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன். ஆனால் அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று சொல்ல முடியாது என்று தோனி கூறியதைக் கேட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய 4 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கே முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அந்த படுதோல்வியிலிருந்து மீண்டெழுந்து ஐபிஎல் 14வது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

இதன்மூலம் அதிகமுறை கோப்பையை வென்ற அணி என்ற வரிசையில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக, 4 முறை வென்ற சாதனைக்கு சொந்தக்கார அணியாகவும், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாகவும் திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, இந்திய அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிஎஸ்கே அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பாட்டீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, “தமிழக ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு உலகம் முழுதும் எங்கு ஆடினாலும் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். தமிழக ரசிகர்களின் கிரிக்கெட் மீதான பார்வை, கிரிக்கெட்டை ரசிக்கும் விதம் குறித்தும் பேசினார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். எனவே தோனி இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது.

அடுத்த சீசனில் புதிதாக 2 அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே தோனி என்ன முடிவெடுப்பார் என்பதை ரசிகர்கள் பேராவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், தனது ஓய்வு குறித்து பேசிய தோனி,

எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் தான் ஆடுவேன். ஆனால் அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று சொல்லமுடியாது என்று கூறி சிரித்தார் தோனி. கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என்று தோனி கூறியதால் கண்டிப்பாக அடுத்த சீசனில் ஆடுவார் என்பது உறுதியாகிவிட்டது. இதைக்கேட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.