ஊரடங்கு காலத்தில் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து உயிரிழந்த பசுவுக்கு ஊர்வலம் நடத்திய அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இச்சூழலில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகிலுள்ள மெம்தி என்ற கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் ஒரு பசு சுற்றி திரிந்துள்ளது. பசுவின் உரிமையாளர் யார் என தெரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களிடம் உணவு இருந்தபோது பசுவுக்கு உணவு அளித்துள்ளனர். ஆனால் ஊரடங்கால் மனிதர்களுக்கே உணவு கிடைக்காத நிலையில், கடைவீதியில் பசியால் சுற்றித் திரிந்த பசு, திடீரென இறந்து விட்டது.

பசு இறந்ததால் நமது ஊருக்கு பஞ்சம் வரும் என கிளப்பிவிடப்பட்ட வதந்தியால் பசுவை நல்லடக்கம் செய்ய முடிவு செய்து, பசுவின் உடலை, ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் வாசிக்க: சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜேன்யூ மாணவிகள் இருவர் கைது- டெல்லி காவல்துறை

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த இந்துத்வா கும்பல் ஒன்று இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்து மக்களை வரவழைத்ததாக குற்றச்சாட்டப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஊரடங்கு காலத்தில் மனிதர்கள் இறந்தாலே 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்த பசுவுக்கு ஊர்வலம் நடத்திய குற்றத்திற்காக 150 பேர்மீது அலிகார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.